இந்தியா

'துரந்தர்', 'கேரளா ஸ்டோரி', 'காஷ்மீர் ஃபைல்ஸ்'.. கேரளாவில் மோடி பேசியது இதுதான்!

'காஷ்மீர் ஃபைல்ஸ்' வந்தபோது, அதெல்லாம் பொய் என்று சொல்லத் தொடங்கினார்கள். இப்போது 'துரந்தர்' திரைப்படம் வந்திருக்கிறது, இதையும் பொய் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் கேரளாவில் ஆளும் இடது முன்னணி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை திருவானந்தபுரத்தில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடி பேரணியில் பேசினார்.

அவர் கூறியதாவது, “காங்கிரசின் யுடிஎப், இடதுசாரிகளின் எல்டிப் கூட்டணியினர் அனைத்தைப் பற்றியும் பொய் சொல்கிறார்கள். நாட்டைத் தவறாக வழிநடத்துகிறார்கள், அதுவே அவர்களின் இயல்பாக இருக்கிறது.

பொய் சொல்வதில் அவர்கள் நிபுணர்கள். 'கேரளா ஸ்டோரி' படம் வந்தபோது, அதெல்லாம் பொய் என்று சொல்லத் தொடங்கினார்கள். 'காஷ்மீர் ஃபைல்ஸ்' வந்தபோது, அதெல்லாம் பொய் என்று சொல்லத் தொடங்கினார்கள். இப்போது 'துரந்தர்' திரைப்படம் வந்திருக்கிறது, இதையும் பொய் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

எதைச் செய்தாலும், அதில் பொய்களைப் பரப்புகிறீர்கள். குடியுரிமை திருத்தச் சட்டம்(CAA) வந்தபோது, அவர்கள் நாட்டு மக்களிடம் எவ்வளவு பொய்களைச் சொன்னார்கள். இன்று CAA சட்டம் வந்துவிட்டது, அதனால் நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

இதே பொய்கள் தான் FCRA மசோதா பற்றியும் பரப்பப்படுகின்றன. இதே பொய்கள் தான் பொது சிவில் சட்டம் (UCC) பற்றியும் பரப்பப்படுகின்றன. UCC கோவாவில் இருக்கிறது. அது அங்கு பல தசாப்தங்களாக இருக்கிறது.

FCRA பற்றிப் பொய் பரப்புவது, CAA பற்றிப் பொய் பரப்புவது, 'துரந்தர்' பற்றிப் பொய் பரப்புவது, 'கேரளா ஸ்டோரி' பற்றிப் பொய் பரப்புவது, 'காஷ்மீர் ஃபைல்ஸ்' பற்றிப் பொய் பரப்புவது என இதுவே அவர்களின் தொழிலாக இருக்கிறது.” என்று தெரிவித்தார்.