அகர்தலா:
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் முதல்வர் பிப்லப் தேவ் வீட்டின் அருகே நேற்று இரவு 10.30 மணியளவில் நம்பர் பிளேட் இல்லாத ஒரு கார் தாறுமாறாக வந்துகொண்டிருந்தது. முதல்வர் வீட்டின் முன்பு, போலீசார் அமைத்திருந்த பேரிகார்டுகளை இடித்து தள்ளிக்கொண்டு சென்றது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், எகிறிக் குதித்ததால் உயிர்தப்பினர்.
பின்னர் சிறிது நேரத்தில் அந்த கார் அருகில் உள்ள எம்எல்ஏ விடுதியின் சுற்றுச்சுவரில் மோதி நின்றது. போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து உள்ளே இருந்தவரை பிடித்தனர். விசாரணையில் அவர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் என்பதும், போதையில் வாகனம் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் முதல்வரின் வீட்டருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் நடந்தபோது இரவு வாக்கிங் சென்ற முதல்வர் பிப்லப் தேவ் அங்கு நின்றுகொண்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட டாக்டரை ஜனவரி 3ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதேல் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.