கேரளம் மாநிலத்தில் அழகு நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர்.
கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் செயல்பட்டு வந்த ஒரு அழகு நிலையத்தில் போதை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குறிப்பிட்ட அழகு நிலையத்தை நிலம்பூர் போலீசாரும், போதைத் தடுப்பு போலீசாரும் ரகசியமாக கண்காணித்தனர்.
இதில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவது உறுதியாகவே அதிரடியாக அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கியிருந்த எம்.டி.எம்.ஏ. போதைப் பொருளை போலீசார் கைப்பற்றினர். அதனை விற்றதாக அழகு நிலைய உரிமையாளர் சுப்பிரமணியன் (வயது 38), சுஹைல் பெரிங்கோடன் (31), பத்திரியலைச் சேர்ந்த டி.என். ரீனா மற்றும் கல்லெம்படத்தை சேர்ந்த விவேக் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சுப்ரமணியன் தான் சுஹைல், விவேக் மற்றும் ரீனா ஆகியோருக்கு தொடர்ந்து எம்.டி.எம்.ஏ.வை வழங்கியிருப்பது தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட சுஹைல் பெரிங்கோடன், கல்லூரி பேராசிரியர் என்பதும், இவர் மாணவர்களுக்கு போதைப் பொருளை விற்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது. அவர், கடந்த 3 ஆண்டுகளாக இதனை செயல்படுத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.