இந்தியா

போராடும் விவசாயிகளுக்கு 'மணிப்பூர்' சூழலை ஏற்படுத்தாதீர்கள் - காங்கிரஸ் எச்சரிக்கை

மோடி அரசுக்கு திரைப்படம் பார்க்க நேரமிருக்கிறது ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்க நேரமில்லை. இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையைத் தடுக்க பயன்படுத்தியிருந்தால் இந்திய எல்லையைச் சீனா ஆக்கிரமித்திருக்காது

மாலை மலர்

மணிப்பூர் போன்ற சூழலை விவசாயிகளுக்கு ஏற்படுத்தாதீர்கள் என காங்கிரஸ் மத்திய அரசை எச்சரித்துள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை MSP க்கான சட்டப்பூர்வ உத்தரவாதம்தர வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி போலீஸ் அடக்குமுறையில் ஈடுபட்டதை அடுத்து காங்கிரஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குஜராத் மாநிலம் கோத்ராவில் நடந்த 2002 ரயில் எரிப்பு பற்றிய திரைப்படமான ' தி சபர்மதி ரிப்போர்ட் ' திரையிடலில் கடந்த திங்களன்று, பிரதமர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

மோடி அரசுக்கு திரைப்படம் பார்க்க நேரமிருக்கிறது ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்க நேரமில்லை. பிரதமர் மோடி விவசாயிகளிடம் தாமதிக்காமல் பேசி உடனடியாக MSP சட்டத்தை இயற்ற வேண்டும் காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

விவசாயிகளைத் தடுக்க பயன்படுத்திய சக்தியை இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையைத் தடுக்க பயன்படுத்தியிருந்தால் இந்திய எல்லையைச் சீனா ஆக்கிரமித்திருக்காது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த மே 2023 இல் மணிப்பூரில் மெய்தேய் மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே வெடித்த வன்முறையில் தற்போதுவரை சுமார் 300 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.