இந்தியா

ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரானுக்கு சீன யுவானில் வரி செலுத்தியதா இந்தியா? - மத்திய அரசு விளக்கம் | Hormuz

ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான், 2 மில்லியன் டாலர் கட்டணம் வசூலிப்பதாக செய்தி வெளியானது.

மாலை மலர்

அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களுக்கு பதிலடியான ஈரான் மத்திய கிழக்கின் பிரதான வணிக போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை எதிரிகள் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு மூடுவதாக அறிவித்தது.

இந்தியாவின் கப்பல்கள் அவ்வழியே அனுமதிக்கப்பட்டன. ஏற்கனவே 4 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா வந்து சேர்ந்த நிலையில் இன்று 2 கப்பல்கள் ஜலசந்தியை பத்திரமாக கடந்துள்ளன.

இந்த சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்கள் ஈரானுக்கு சீன நாணயமான யுவானில் சுங்க வரி செலுத்தியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இந்நிலையில் இந்த செய்திகள் பொய்யானவை என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் உண்மை சரிபார்ப்பு அமைப்பு வெளியிட்ட எக்ஸ் பதிவில், சம்பந்தப்பட்ட போலி செய்தியின் புகைப்படத்தை பகிர்ந்து சமூக ஊடகங்களில் வரும் இதுபோன்ற பொய்யான மற்றும் ஆதாரமற்ற கூற்றுகள் மற்றும் பதிவுகள் குறித்து, தயவுசெய்து விழிப்புடன் இருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான், 2 மில்லியன் டாலர் கட்டணம் வசூலிப்பதாக லண்டனைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.