இந்தியா

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: ஆய்வுசெய்ய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவு

ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டு தெரிவித்தனர்.விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வுசெய்ய உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி:

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.

141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளுக்கு உரிய மாற்று ஏற்பாடு செய்யவும் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி ராம் மோகன் நாயுடு உத்தரவிட்டார்.