இந்தியா

இண்டிகோ விமான சேவைகளை 5% குறைக்க DGCA உத்தரவு!

ஒரு நாளைக்கு சுமார் 115 விமானங்களின் சேவையை ரத்து செய்ய உத்தரவுவிமான சேவைகள் நிறுத்தப்படும் வழித்தடங்களில் மற்ற நிறுவனங்களின் விமானங்கள் இயக்கப்படும்

மாலை மலர்

இண்டிகோ விமானங்களின் ரத்து மற்றும் தாமதத்தால் பயணிகள் பெரும் அவதியடைந்த நிலையில், முக்கிய வழித்தடங்களில் அதன் சேவைகளை 5 சதவீதம் குறைக்க டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு சுமார் 115 விமானங்களின் சேவையை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக அதிக தேவை மற்றும் அதிக அதிர்வெண் கொண்ட வழித்தடங்களில் இண்டிகோவின் சேவையை குறைக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் முடிவு செய்துள்ளது. 

திருத்தப்பட்ட அட்டவணையை புதன்கிழமை (டிசம்பர் 10) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் ஏற்படும் மாற்றம், இண்டிகோவின் தினசரி விமான நடவடிக்கைகளைப் பொறுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இண்டிகோ விமான சேவைகள் நிறுத்தப்படும் வழித்தடங்களில் மற்ற நிறுவனங்களின் விமானங்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இண்டிகோ இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாகும். இதன் உள்நாட்டு சந்தைப் பங்கு கிட்டத்தட்ட 65 சதவீதமாகும்.  தினசரி 2,300 விமானங்களை இயக்குகிறது. அவற்றில் 2,150 உள்நாட்டு விமானங்கள். மத்திய அரசு சமீபத்தில் புதிய விமான பணி நேர வரம்பு விதிமுறைகளை அமல்படுத்தியது. இதன் காரணமாக பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு இண்டிகோ நிறுவனம் கடந்த வாரத்தில் மட்டும்  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்தது. இதனால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.