இந்தியா

திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு 12 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்

ஏழுமலையான் கோவிலில் நேற்று 70,250 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.நேரடி இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பின.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று சனிக்கிழமை என்பதால் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ஏழுமலையான் கோவிலில் நேற்று 70,250 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 34 ஆயிரத்து 14 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

இன்று காலையில் நேரடி இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பின. அதற்கு வெளியே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். சாமி தரிசனத்திற்கு 12 மணி நேரம் ஆனது.

ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரம் வரையிலும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.