இந்தியா

பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டி - தேவ கவுடா அறிவிப்பு

கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றார் முன்னாள் பிரதமர் தேவகவுடா. வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும் என்றார்.

பெங்களூரு:

கர்நாடகாவில் காங்கிரசை எதிர்க்க பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட போவதாக தேவ கவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி அறிவித்து இருந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஹெச்.டி.தேவகவுடா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வரும் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்தே போட்டியிடும். எங்கள் கட்சி ஐந்து, ஆறு, மூன்று, இரண்டு அல்லது ஓர் இடத்தில் வெற்றி பெற்றாலும், இந்த மக்களவைத் தேர்தலில் கட்சி தனித்தே போட்டியிடும்.

எங்கள் கட்சியினருடன் கலந்தாலோசித்த பின்னர் கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று தெரிவித்தார்.

குமாரசாமியின் கருத்துக்கு நேர்மாறாக தேவகவுடா கருத்து தெரிவித்துள்ளது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT