புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அம்மாநில துணை முதல் மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியாவை சமீபத்தில் சி.பி.ஐ. கைது செய்தது. அதேபோல் அவரை அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது.
இந்த வழக்கில் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகரராவ் மகளும், பாரத ராஷ்டிரீய சமிதி கட்சியின் எம்.எல்.சி.யுமான கவிதா மீது குற்றம் சாட்டப்பட்டது. மதுபான கொள்கையில் தயாரிப்பாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அளித்த சலுகைகளுக்காக கவிதா உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் சவுத் குரூப் சார்பில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு லஞ்சப்பணம் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே கவிதாவிடம் விசாரணை நடத்த கடந்த 9-ம் தேதி ஆஜராகும்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் தான் 11-ம் தேதி ஆஜராகுவதாக கவிதா அமலாக்கத்துறை இயக்குனரகத்திடம் தெரிவித்தார். அதன்படி கவிதா இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மதுபான கொள்கை முறைகேட்டில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ஏறக்குறைய அமலாக்கத்துறை 9 மணிநேரம் அவரிடம் விசாரண நடத்தி, கேள்விகளை கேட்டு பதில்களை பதிவு செய்து கொண்டது. அதன்பின் அவர் தனது வாகனத்தில் இரவில் விசாரணை முடிந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை பணமோசடி வழக்கில் வரும் 16-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கவிதாவுக்கு அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.