டெல்லி செங்கோட்டைப் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியது.
அப்போது பயங்கரவாத செயலுக்காக குற்றவாளி ஒருவர், செயற்கை நுண்ணறிவை தவறாக பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை டெல்லியில் உள்ள சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 7500 பக்க அறிக்கையில்,
“பயங்கரவாத செயலில் ஈடுபட்ட குற்றவாளி ஜசிர் பிலால் வானி, 2024-25 காலகட்டத்தில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்துள்ளார்.
அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் பயங்கரவாத குழுவின் நிறுவன பொறியாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது ராக்கெட் செய்வதற்கான வழிமுறை குறித்து யூடியூப் மற்றும் சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் ஜசிர், டாக்டர் உமர், டாக்டர் முஸம்மில் ஷகீல் ஆகியோர் பிற குற்றவாளிகளுடன் இணைந்து காசிகுண்ட் வனப்பகுதியில் ராக்கெட் வெடிகுண்டுகளை தயாரித்து சோதனை செய்துள்ளனர்.
இதையடுத்து இவர்கள் நடத்திய கார் வெடிவிபத்தில் 11 பேர் டெல்லி செங்கோட்டையில் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளது.