இந்தியா

VIDEO: சாலையில் ஓடும் வாகனங்களின் கதவுகளை திறந்து ரீல்ஸ் எடுத்த வாலிபர் கைது

யாரும் தன்னை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக வாகனத்தின் நம்பர் ப்ளேட் இல்லாமல் உலா வந்துள்ளார்.இதற்கு முன்பு இதே போன்ற சம்பவங்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோவிற்கு கிடைக்கும் லைக்கிற்கு ஆசைப்பட்டு பலரும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு இன்னுயிரை இழக்கும் பல வீடியோக்களை காணமுடிகிறது. இந்த வீடியோக்களை பார்த்து விழிப்புணர்வு வரும் என்று பார்த்தால் இங்கு ஒருவர் அவருக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதெல்லாம் பார்த்து சும்மா விடுவாங்களா நம்ம போலீசார்... அதிரடி ஆக்ஷனில் இறங்கி அந்த வாலிபரை கைது செய்துள்ளனர். அதுகுறித்து பார்ப்போம்...

ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வாலிபர் ஒருவர், சாலையில் இயங்கிக்கொண்டிருக்கும் அரசு பேருந்தின் கதவை திறப்பது, பேருந்தின் முன்பு வேகமாக இருசக்கர வாகனத்தில் போய் நிற்பது மற்றும் சாலையில் செல்லும் வாகனங்களின் கதவை திறப்பது என்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் நடந்துக்கொண்டுள்ளார். மேலும் அதி புத்திச்சாலித்தனமாக யாரும் தன்னை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக வாகனத்தின் நம்பர் ப்ளேட் இல்லாமல் உலா வந்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வாலிபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டிய வாலிபரின் அடையாளத்தை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து வடகிழக்கு டெல்லியில் கஜூரி காஸில் வசிக்கும் துஷார் புனியா என்ற வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதற்கு முன்பு இதே போன்ற சம்பவங்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.