டெல்லியில் விகாஸ்புரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கேசாபூர் மண்ட என்ற பகுதியில் நீர்வளத் துறைக்குச் சொந்தமான ஒரு ஆழ்துளைக் கிணறு ஒன்று உள்ளது. இந்தக் குழியில் குழந்தை ஒன்று தவறி விழுந்ததாக செய்திகள் வெளியானது.
தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நபர் இன்று பிற்பகல் 3 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். அப்பொழுது குழியில் விழுந்தது குழந்தை இல்லை, 30 வயது மதிப்புடைய நபர் என்று தெரிய வந்துள்ளது.
அந்த நபர் எப்படி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார் என்றும், இறந்த நபரை அடையாளம் காணும் முயற்சிகளும் நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, டெல்லி அமைச்சர் அதிஷி, தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார்களால் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் உடனடியாக சீல் வைக்கப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.