ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் அரசு நடத்தும் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை மீட்டு மருத்துவமனையின் மற்ற பிரிவுகளுக்கு மாற்றினர்.
இந்த தீ விபத்தில் 10 நோயாளிகள் பலியாகினர், 11 பேர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
முதல் மந்திரி மோகன் சரண் மாஜி, சுகாதாரத்துறை மந்திரி முகேஷ் மகாலிங் ஆகியோர் மருத்துவமனை சென்று ஆய்வு செய்தனர்.
அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினர். தீ விபத்து நடந்தது குறித்த விசாரணைக்கு முதல் மந்திரி உத்தவிட்டார்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கட்டாக் மருத்துவமனை தீ விபத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து, தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.