இந்தியா

அரியானாவில் இறந்த பிச்சைக்காரர் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லெக்ராஜ் இறந்து போனார். இரும்பு பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் மூட்டை கட்டி வைக்கப்பட்டு இருந்தன.

அரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்தவர் லெக்ராஜ். இவர் கடந்த 10 ஆண்டுகளாக பரபரப்பான ரெயில்வே சாலை மற்றும் ஹனுமன் கோவில் ஆகிய இடங்களில் பிச்சை எடுத்து வந்தார்.

அழுக்கான கிழிந்த உடைகள், தளர்வான முகம் மற்றும் பழைய 3 சக்கர மிதிவண்டியில் சென்று பிச்சை எடுப்பது வழக்கம். இவருக்கு கடந்த 9-ந் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை கண்டு தொண்டு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் லக்ராஜை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லெக்ராஜ் இறந்து போனார். இதையடுத்து தன்னார்வ தொண்டு அமைப்பின் நிர்வாகிகள் அவரது உடலை அடக்கம் செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த அம்பாலா போலீசார் லெக்ராஜின் 3 சக்கர சைக்கிளை சோதனை செய்தனர். சைக்கிளின் பின்புறம் இருந்த இரும்பு பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் மூட்டை கட்டி வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் அந்த பெட்டியில் இருந்த இந்தியன் வங்கி கணக்கு அட்டையை சோதனை செய்தபோது அதில் ரூ.3.32 லட்சம் இருந்தது. இதனை கண்டு போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.

SCROLL FOR NEXT