ஆந்திரா மாநிலம் சத்ய சாய் மாவட்டம் தனக்கல்லு அடுத்த பெத்த பள்ளியை சேர்ந்தவர் முத்தியார் பாஷா. இவர் தனது கிராமத்தின் அருகே உள்ள 14 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டி உள்ளார்.
மும்பையை சேர்ந்த கட்டிட கலைஞர்களைக் கொண்டு அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வடிவில் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
கோவிலில் ராமர், லட்சுமணர், சீதா, ஆஞ்சநேயர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ராம நவமியை முன்னிட்டு 9 நாட்கள் தினமும் பூஜைகள் நடைபெறுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து முத்தியார் பாஷா கூறுகையில், சிறு வயதில் இருந்து கிராமத்தில் உள்ள கோவிலில் நடக்கும் பூஜை நிகழ்ச்சிகளை பார்த்து வளர்ந்தேன். அதுவே தனக்குள் பக்தியை வளர்த்தது. அயோத்தி சென்று ராமரை தரிசிக்க முடியாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்லலாம் என தெரிவித்தார். கோவிலுக்கு வந்து செல்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.