ஈரான் போரினால் கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஏற்படும் இடையூறுகள் காரணமாக உரம், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதி பாதித்துள்ளன.
இந்நிலையில் பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் இறக்குமதியில் மத்திய நிதி அமைச்சகம் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது.
மத்திய கிழக்கு போர் காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, முக்கிய பெட்ரோலிய வேதிப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த வரி விலக்கு, ஜூன் 30 வரை தொடரும்.
சுங்க விலக்கு அளிக்கப்பட்ட வேதிப்பொருட்களின் மெத்தனால், நீரற்ற அம்மோனியா, டோலுயீன், ஸ்டைரீன், டைக்ளோரோமீத்தேன், வினைல் குளோரைடு மோனோமர், பாலிபியூட்டாடையீன், ஸ்டைரீன் பியூட்டாடையீன் மற்றும் பாலியெஸ்டர் ரெசின்கள் உள்ளிட்டவை அடங்கும்.
இந்த முடிவு பிளாஸ்டிக், பேக்கேஜிங், ஜவுளி, மருந்துப் பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் வாகனத் துறை போன்ற துறைகளுக்குப் பெரும் நிம்மதியை வழங்கியுள்ளது. இந்த வரி விலக்கால் நுகர்வோருக்கும் நேரடி பயன் கிடைக்கும்.