கேரள மாநிலத்தில் அடுத்த மாதம் 9-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி பாஜக-வின் B Team என்று பினராயி விஜயன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- பாஜக கூட்டணி இந்த முறை கேரளாவில் எடுபடாது என்று காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கே.சி வேணுகோபால் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைமையிலான UDF ஆட்சிக்கு வந்தால், கேரள மாநில போக்குவரத்து கழகம் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.
சிபிஐ (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) மற்றும் LDF-க்கு மக்கள் அவர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரியும். இதனால் அவர்கள் கடைசி யுக்தியை செயல்படுத்திக் கொண்டிருக்கிறாரக்ள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- பாஜக நட்பு கேரளாவில் புதிது அல்ல.
பாலம் கட்டும்போது, இரு பக்கங்களுக்கும் நலன் பெற வேண்டும். முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிரான லாவலின் வழக்கில் ஏற்பட்ட ஒத்திவைப்பை நாம் பார்த்திருக்கிறோம். கேரளாவில் மத்திய முகமைகளின் விசாரணையின் வேகத்தையும் நாம் பார்த்திருக்கிறோம்.
தேர்தலில் பரஸ்பரம் உதவிக் கொள்வதற்காக இரு கட்சிகளும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாகக் கூறும் வகையில், சி.பி.ஐ. (எம்) மற்றும் பாஜக-வின் வேட்பாளர் பட்டியல்களிலும் அதே தொடர்பு பிரதிபலித்தது.
ஆனால், அவர்களது கட்சித் தொண்டர்களே இந்த ஒப்பந்தத்தை நிராகரிப்பார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவர்கள் இதற்கு முன்பும் இதை முயற்சித்தனர், ஆனால் அது அம்பலமானது. அதே கதியே மீண்டும் நிகழும்.
இவ்வாறு கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.