இந்தியாவின் பிரபல தொழிலாலதிபரும் கிங்பிஷர் நிறுவன உரிமையாளருமான விஜய் மல்லையா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் வாங்கிய ரூ.180 கோடி கடன் மற்றும் தனது நிறுவனத்தின் மூலம் வாங்கிய பல்வேறு கடன்களை அடைக்காமல் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வர அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணானது. விஜய் மல்லையா தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அவர் மீதான வழக்கு இதுநாள்வரை விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் அவரம்மீது சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. எனவே தற்போது மும்பையிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்னரும் பல முறை விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கடந்த வாரம் விஜய் மல்லையா மகனுக்கு லண்டனில் வைத்து ஆடம்பரமாக பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.