இந்தியா

காங்கிரஸ் பாகிஸ்தானின் ராகத்தை பாடுகிறது - அசாமில் மோடி ஆவேசம்

அசாமின் வாழ்வாதாரம், அடையாளம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுடன் ஊடுருவல் பிரச்சனை இணைந்துள்ளது. மாநிலத்தின் மக்கள் தொகை சமநிலையைப் பாதுகாக்க பாஜகவிற்கு வாக்களிப்பது அவசியம்.

அசாம் மாநிலத்தின் 126 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் பார்பேட்டா மாவட்டத்தில் இன்று நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

அங்கு அவர் பேசியதாவது, "2016 சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் 2025இல் நடந்த ஆபரேஷன் சிந்தூர் ஆகிய இரண்டின் போதும் காங்கிரஸ் பாகிஸ்தானின் ராகத்தையே பாடியது.

காங்கிரஸின் இந்த பாகிஸ்தான் தொடர்பு எப்போதும் நாட்டிற்குப் பாரமாகவே அமைகிறது; இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

காங்கிரசின் தலைமை குடும்பம் இந்த நாட்டின் மிகப்பெரிய ஊழல்வாதிகள். அவர்கள் மிகப்பெரிய ஊழல்களில் ஈடுபட்டு தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்கள்.

ராகுல் காந்தி பேசி வரும் அன்பின் கடை உண்மையில் ஒரு பொய்க்கடை. காங்கிரஸ் எப்போதுமே ஊழலில் ஈடுபடுவதற்காகக் குறுகிய காலத் திட்டங்களையே செயல்படுத்தியது.

ஆனால், பாஜக அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காக நீண்டகாலத் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகிறது.

அசாமின் புகழ்பெற்ற ஜோஹா அரிசி தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அசாமின் வாழ்வாதாரம், அடையாளம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுடன் ஊடுருவல் பிரச்சனை இணைந்துள்ளது. மாநிலத்தின் மக்கள் தொகை சமநிலையைப் பாதுகாக்க பாஜகவிற்கு வாக்களிப்பது அவசியம்.

உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு கட்டுக்குள் வைத்துள்ளது.

அசாமில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர வேண்டுமானால் காங்கிரஸை ஆட்சியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.