காங்கிரஸ கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி தலைவருமான சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார் என இரண்டு நாட்களாக செய்திகள் வெளியாகின.
தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. ராஜஸ்தானில் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதற்கான மனுத்தாக்கல் செய்ய இன்று காலை 10 மணியளவில் ராஜஸ்தான் வந்தடைந்தார். அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் வந்தனர்.
ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் வந்திருந்தனர்.
பின்னர் சரியாக 12 மணியளவில் ராஜஸ்தான் சட்மன்ற வளாகம் வந்தடைந்தார். அதன்பின் மாநிலங்களவை எம்.பி. போட்டிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சோனியா காந்தி கடந்த 1999 -ம் ஆண்டில் இருந்து மக்களவை எம்.பி.யாக இருந்து வருகிறார். தற்போது முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். அவரது உடல்நிலை காரணமாக மாநிலங்களவை எம்.பி. ஆக முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.