இந்தியா

அரசியலமைப்பை சிதைத்த காங்கிரஸ், தற்போது பா.ஜ.க. மீது குற்றம்சாட்டுகிறது: நிதின் கட்கரி

நாங்கள் அம்பேத்கரின் அரசியலமைப்பை மாற்றமாட்டோம். வேறு யாரையும் மாற்ற விடமாட்டோம். அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது.

சுயநலனுக்காக இந்திய அரசியலமைப்பை சிதைத்த காங்கிரஸ், தற்போது பா.ஜ.க. மீது குற்றம்சாட்டுவதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கடோல் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சரன்சிங் தாகூரை ஆதரித்து மத்திய அமைச்சரான நிதின் கட்கரி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தல் கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-

பா.ஜ.க. கட்சி அரசியலமைப்பு மாற்றும் என காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. நாங்கள் அம்பேத்கரின் அரசியலமைப்பை மாற்றமாட்டோம். வேறு யாரையும் மாற்ற விடமாட்டோம். அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது.

அரசியலமைப்பின் முக்கிய அம்சங்களான பேச்சு சுதந்திரம், ஜனநாயகம், சமூகநீதி, மதசார்பின்மை போன்ற அடிப்படை உரிமைகளை யாராலும் மாற்ற முடியாது. எமர்ஜென்சியின்போது இந்திரா காந்தி அரசியலைமைப்பை சிதைத்தார். நாட்டின் வரலாற்றில் அரசியலமைப்பை சிதைத்த பாவத்தை செய்த காங்கிரஸ்தான் இப்போது நம் (பா.ஜ.க.) மீது குற்றம் சுமத்துகிறது.

நீங்கள் ராம ராஜ்ஜியத்தை நிறுவ விரும்பினால் அது தலைவர்கள் கையில் இல்லை. மக்கள் கையில் உள்ளது. சாதி, இனம், மதம், மொழி அடிப்படையில் வாக்களிக்கக் கூடாது. மனிதன் ஜாதியால் பெரியவன் அல்ல அவனுடைய குணங்களால் மட்டுமே பெரியவன். தீண்டாமை, சாதி வெறி ஒழிக்கப்பட வேண்டும்.

நீங்கள் உணவு மற்றும் ஆரோக்கியத்திற்காக சிறந்த நபரிடம் அவர்களின் சாதியைப் பார்க்காமல் செல்கிறீர்கள். நேர்மையான, ஊழலற்ற தலைவர்களையும், கட்சியையும் தேர்ந்தெடுக்கும் வரை உங்கள் எதிர்காலம் மாறாது

இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

SCROLL FOR NEXT