பிஜேடியின் 8 எம்.எல்.ஏக்களும், காங்கிரசின் 3 எம்.எல்.ஏக்களும் கட்சி மாறி பாஜக ஆதரவு வேட்பாளருக்கு வாக்களித்தனர்.
மகாராஷ்டிரத்தில் 7 இடங்கள், தமிழகத்தில் 6 இடங்கள், மேற்கு வங்கம், பீகாரில் தலா 5 இடங்கள், ஒடிசாவில் 4 இடங்கள், அசாமில் 3, சத்தீஸ்கா், அரியானா, தெலங்கானா மாநிலங்களில் தலா 2 இடங்கள், ஹிமாச்சல பிரதேசத்தில் ஓரிடத்துக்கு மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் பீகார், அரியானா, ஒடிசாவில் உள்ள 11 இடங்களைத் தவிர்த்து, மற்ற மாநிலங்களில் 26 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து 6 போ் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதும் இதில் அடங்கும்.
பீகார், ஒடிசா, அரியானா மாநிலங்களில் காலியாகும் இடங்களின் எண்ணிக்கையை விட வேட்பாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. அதனால் அங்கு தேர்தல் நேற்று நடைபெற்றது.
பீகார்
வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பீகாரில் பாஜகவின் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
பீகாரில் காலியாக இருந்த மொத்தம் 5 இடங்களில் என்டிஏ கூட்டணி சார்பில் நிதிஷ் குமார் (ஜேடியு), நிதின் நபின் (பாஜக), ராம்நாத் தாக்கூர் (ஜேடியு), உபேந்திர குஷ்வாஹா (ஆர்எல்எம்) மற்றும் சிவேஷ் குமார் (பாஜக) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஒடிசா
ஒடிசாவில் மொத்தம் 4 இடங்களில் பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது.
அங்கு ஆளும் என்டிஏ சார்பில் மன்மோகன் சமல் (பாஜக), சுஜித் குமார் (பாஜக), திலீப் ராய் (சுயேச்சை - பாஜக ஆதரவு) வெற்றி பெற்றனர். மீதமுள்ள ஒரு இடத்தில் நவீன் பட்நாயக்கின் பிஜேடியை சேர்ந்த சந்த்ருப்த் மிஸ்ரா வெற்றி பெற்றார்.
அங்கு பிஜேடியின் 8 எம்.எல்.ஏக்களும், காங்கிரசின் 3 எம்.எல்.ஏக்களும் கட்சி மாறி பாஜக ஆதரவு வேட்பாளரான திலீப் ராய்க்கு வாக்களித்தது காங்கிரஸ்-பிஜேடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா
அதேநேரம் அரியானாவில் 2 இடங்களுக்கான தேர்தலில், வாக்குப்பதிவில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையிலான புகார்களுக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.