ரிஷிகேஷில் நடைபெற்ற அகில இந்திய மேயர்கள் கவுன்சிலின் 117-வது செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் தாமி, லால்பானி பீட் பகுதியில் ரூ.23.15 கோடி மதிப்பிலான உரமாற்று ஆலை மற்றும் சுகாதாரக் கழிவு புதைப்பு மையத் திட்டத்தை திறந்து வைத்தார். மேலும், ரிஷிகேஷ் மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் மற்றும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான அடிக்கல் நாட்டினார்.
நகர்ப்புற உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல் மற்றும் வேகமாக அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளை திறம்பட நிர்வகிப்பதில் மாநில அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ரூ.29.78 கோடி மதிப்பிலான மூன்று வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டியுள்ளார்.
கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் தாமி, நகரங்களின் எதிர்கால வளர்ச்சியையும், நாட்டின் உலகளாவிய மதிப்பையும் உருவாக்குவதில் மேயர்களின் பங்கு மிக முக்கியமானது என்று வலியுறுத்தினார். “மேயர்கள் தங்கள் நகரங்களின் முதல் குடிமக்கள் மட்டுமல்ல; மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்பு மற்றும் கனவுகளின் பிரதிநிதிகளும் ஆவர். அவர்கள் எடுக்கும் முடிவுகள் வருங்கால தலைமுறைகளின் வாழ்வில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருந்தாலும், மக்களின் கனவுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் நகரங்களில்தான் உருவாகின்றன,” என்று அவர் கூறினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு முழுவதும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தூய்மைப் பணிகளில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். “பிரதமரின் தலைமையில் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுவச்ச் பாரத் திட்டம் மூலம் நகரங்களில் தூய்மைக்கான புதிய கலாசாரம் உருவாகியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் நவீன மற்றும் திட்டமிடப்பட்ட நகர வளர்ச்சிக்கான முன்மாதிரிகளை உருவாக்கி வருகிறது. பிரதமர் வீட்டு வசதி திட்டம் மூலம் கோடிக்கணக்கான ஏழை குடும்பங்களின் சொந்த வீட்டு கனவு நனவாகியுள்ளது. அதேபோல், பிரதான் மந்திரி சுவநிதி திட்டம் தெருவோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தியுள்ளது,” என்றார்.
நகராட்சிகளின் திறமையான நிர்வாகமே நாட்டின் வளர்ச்சியுடன் நேரடியாக தொடர்புடையது என்றும் அவர் கூறினார். “உலக நாடுகளின் பார்வையில் ஒரு நாட்டின் உண்மையான முகமாக நகரங்களே விளங்குகின்றன.
நகரங்கள் ஒழுங்காகவும், தூய்மையாகவும், பாதுகாப்பாகவும், வளர்ச்சியடைந்ததாகவும் இருந்தால், இந்தியா ஒரு வலுவான, வளமான மற்றும் முன்னணி நாடாக உலக அரங்கில் மேலும் உயர்ந்த இடத்தைப் பெறும். நகரங்கள் தூய்மையாக இருந்தால் இந்தியா தூய்மையாக இருக்கும்; நகரங்கள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டால் நாடும் சிறப்பாக நிர்வகிக்கப்படும்.
ஒவ்வொரு நகரமும் வலுவானதாகவும், பாதுகாப்பானதாகவும், வளமானதாகவும் மாறினால், வளர்ந்த நாடாக உருவாகும் இந்தியாவின் இலக்கு நிச்சயமாக நிறைவேறும்,” என்று முதலமைச்சர் தாமி தெரிவித்தார்.