இந்தியா

வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்களுக்கு திரையரங்குகள் தடை விதிக்கலாம்- உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மல்டிபிளக்ஸ்கள் மற்றும் திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருவோர், வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் கொண்டு வருவதை தடை செய்யக் கூடாது என்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், படம் பார்க்க வருவோர் வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்களை திரையரங்குகளுக்குள் கொண்டு செல்வதை திரையரங்க உரிமையாளர் தடை செய்யலாம். இருப்பினும், அனைத்து திரையரங்குகளிலும் பார்வையாளர்களுக்கு சுகாதாரமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

மேலும், கைக்குழந்தை அல்லது குழந்தையை அழைத்து வருவோர் குழந்தைகளுக்கு தேவையான அளவு உணவை திரையரங்குகளுக்குள் எடுத்துச் செல்லலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.