சத்தீஸ்கரில் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி வாங்குவதற்கு வசதியாக ரேஷன் ஏடிஎம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பொதுமக்கள் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி வாங்குவதற்கு வசதியாக வங்கி ஏடிஎம் போல செயல்படும் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘அன்னபூர்த்தி கிரெயின் ஏடிஎம்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் தலைநகர் ராய்ப்பூரின் பிர்கான் பகுதியில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் பயனாளிகள் 24 மணி நேரமும் தங்களுக்கான மாதாந்திர ரேஷன் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ரேஷன் கார்டு எடுத்துச்சென்றால் ஸ்கேன் செய்யவேண்டும். ஸ்கேன் செய்த உடன் ரேஷனில் உள்ள மிஷினில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைக் காட்டும். அதில் உங்கள் பெயரை செலக்ட் செய்து கைரேகை வைக்கவேண்டும்.
கைரேகை வைத்த உடன் இயந்திரமே அதனை சரிபார்த்துவிடும். சரிபார்ப்பிற்குப் பின், அரிசி மற்றும் உணவுப்பொருட்களை தேர்வு செய்தால் துல்லியமாக அளந்து உணவுப்பொருட்களை உங்களுக்கு விநியோகித்து விடும்.
இந்த ரேஷனில் எடையைக் குறைத்து அளப்பது உள்ளிட்ட மனிதத் தவறுகளுக்கு சாத்தியமே இல்லை.
பயனாளிகள் தங்களது ரேஷன் அட்டை விவரங்களை உள்ளிட்டு, கைரேகையைப் பதிவு செய்ததும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவு அரிசி இயந்திரத்திலிருந்து வெளியே வரும். இந்த இயந்திரம் சுமார் 2,500 கிலோ அரிசியை சேமித்து வைக்கும் திறன் கொண்டது.
அரிசியை இயந்திரத்தில் நிரப்புவதும், பயனாளிகளுக்கு விநியோகிப்பதும் தானியங்கி முறையில் நடைபெறும். இந்தத் திட்டத்துக்கு உலக உணவுத் திட்டம் ஆதரவு அளித்து வருகிறது.