இந்தியா

சத்தீஸ்கரில் சோகம்: கண்ணிவெடி அகற்றுகையில் குண்டு வெடித்து 4 வீரர்கள் பலி

வெடிகுண்டு செயலிழக்க செய்வதற்கு முன் வெடித்து விட்டது.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் அதிகம் நிறைந்த பகுதிகளில் கண்ணிவெடிகள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை வீரர்கள் அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள கான்கர் மாவட்டத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் மாவட்ட ரிசர்வ் படையினர் ஈடுபட்டனர்.

சோட்டேபெதியா காவல்நிலையத்தில் இருந்து ஒரு குழு புறப்பட்டுச் சென்று கான்கர்-நாராயண்பூர் எல்லைப்பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுதல், அந்தப் பகுதியை கட்டுக்குள் கொண்டு வருதல் மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டனர்.

அப்போது சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்தது. மாவோயிஸ்டுகாரர்கள் மறைத்து வைத்து விட்டுச் சென்றிருந்த வெடிகுண்டு செயலிழக்க செய்வதற்கு முன்பு அது வெடித்து விட்டது. இதில், மாவட்ட ரிசர்வ் படையை சேர்ந்த 4 வீரர்கள் பலியாகினர்.

சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை கண்டுபிடித்தும், செயலிழக்க செய்யும் பணியில் ஈடுபட்ட வீரர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.