ஆன்லைன் மூலமாக இன்று அத்தனையையும் பெற்று விட முடிகிறது. இதனால் இளைஞர்களும், இளம் பெண்களும் வேறு விதமாகவும் சிந்திக்கிறார்கள். சமூக வலைதளங்கள் மூலமாக இளைஞர்கள் பல்வேறு தவறான வழிகளிலும் திசைமாறி சென்றுக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு ஆண்ணும், பெண்ணும் பேசி பழகி தான் வெளியில் செல்ல வேண்டும் என்கிற நிலை எல்லாம் இப்போது இல்லை. வெளியில் ஒன்றாக சுற்றுவதற்கு இளம்பெண்களை ஆன்லைனிலேயே தேர்வு செய்யும் அளவுக்கு கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு செயலிகள் இதற்காக தொடங்கப்பட்டு ஆண்களுக்கும், பெண்களுக்கும் வலைவிரித்து கொண்டுள்ளன. குறிப்பாக செயலிகள் மூலமாக பெண்களை தேர்வு செய்து அவர்களுடன் வெளியில் தங்கி உல்லாசமாக வாழ்வதையும் இளைஞர்கள் வழக்கப்படுத்தி வைத்துள்ளனர்.
தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே ஆபாச செயலிகள் மூலமாக பலரும் பணத்தை இழந்து வருகிறார்கள். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சபல புத்தி கொண்ட ஆண்களுக்கு வலைவிரித்து கோடிகளில் புரண்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற அந்த இளம்பெண் பல்வேறு பெயர்களில் சமூக வலைதள கணக்குகளை தொடங்கி அதில் சுறுசுறுப்பாக செயல்பட்டு உள்ளார். முகம் தெரியாத ஆண்களிடம் ஆரம்பத்தில் சாட்டிங்கில் பேசத் தொடங்கும் இவர் நாளடைவில் ஆபாசமான பேச்சுக்களையும் அள்ளி வீசியுள்ளார்.
பல்லவி சிங்கின் இந்த மயக்கும் பேச்சில் வாலிபர்கள் பலர் கிறங்கி போய் கிடந்துள்ளனர். அதனை பயன்படுத்தி அவர்களோடு வெளியில் சென்று தனியறையில் தங்கியுள்ள பல்லவி சிங் அரைகுறை ஆடைகளோடு இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ரகசியமாக படம் பிடித்துள்ளார்.
இதுபோன்ற ஆபாச வீடியோக்களை பயன்படுத்தி இதற்கு முன்னரும் பெண்கள் பலர் மிரட்டி பணம் பறித்துள்ள சம்பவங்கள் அரங்கேறியுள்ள போதிலும் பல்லவி சிங் அதன் மூலமாக பல கோடிகளை ரூபாயை பறித்து இருப்பது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
வசதிப் படைத்தவர்கள் வலையில் விழுந்ததும் பல்லவி சிங் தனது வேலையை காட்டத் தொடங்கிவிடுவார். உன்னுடைய ஆபாச வீடியோக்கள் என்னிடம் நிறைய உள்ளது. அதையெல்லாம் வெளியில் விட்டால் மானம் போய்விடும் என்று தன்னிடம் சிக்கும் வாலிபர்களிடம் பேசி அவர்களிடம் இருந்து அதிகளவில் பணத்தை கறப்பதே வாடிக்கையாக வைத்திருந்த பல்லவி சிங் ரூ.6 கோடி வரையில் சுருட்டி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை வீட்டில் ஒரு அறையில் அடுக்கி அதனை மெத்தையாகவும் மாற்றி இருக்கிறார்.
பின்னர் அந்த பண மெத்தையில் படுத்து புரளுவது போன்ற வீடியோக்களையும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த படி பல்லவி சிங் எடுத்த புகைப்படமும் அவரது பண மெத்தை வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனது மிரட்டலுக்கு பணியாத ஆண்களை பல்லவி சிங் சிறையிலும் தள்ளி இருக்கிறார்.
பணம் தர மறுத்து அடம்பிடிப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்து உள்ளார். இதுபோன்று 5 பேர் வரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றசாட்டுகள் கூறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணம் தர மறுத்த பலரிடம் ஒழுங்காக தான் சொல்வதை கேட்காவிட்டால் சிறைக்கு தான் செல்ல வேண்டும். ஏற்கனவே 5 பேரை சிறையில் அடைத்துள்ளேன் என்று மிரட்டுவதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனால் பல்லவி சிங்குடன் தொடர்பில் இருந்த பெரிய மனிதர்கள் பலர் எங்கே தங்கள் மானம் போய்விடுமோ என்கிற பயத்தில் கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள்.
சுவீட்டி திவாரி என்கிற பெயரிலும் தனியாக சமூக வலைதள கணக்கை தொடங்கி அதன் மூலமாகவும் பல வாலிபர்களை பல்லவி சிங் தனது வலையில் வீழ்த்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவரது இந்த மோசடிக்கு மேலும் தோழிகள் இருவரும், ஆண் நண்பர்கள் 2 பேரும் பெரிய அளவில் உதவிகளை செய்து வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பல்லவி சிங்கின் இந்த செயல் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமுக வலைதளங்களில் அவரது இந்த செயலை பலரும் விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் சிலர் இப்படி எல்லாம் ஏமாற்ற முடியுமா? வாழ்ந்தா இப்படி வாழனும் என்பது போன்ற கருத்துக்களையும் கிண்டலுடன் பதிவிட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உத்தரபிரதேச மாநில போலீசார் சமூக வலைதளங்களை பயன் படுத்துபவர்கள் தேவையில்லாமல், அறிமுகமில்லாம் நபர்களோடு பழகினால் இதுபோன்ற ஆபத்துகளில் சிக்க நேரிடும் என்றும் எனவே முன்பின் அறிமுகம் இல்லாதவர்களோடு ஆன்லைன் மூலமாக எந்த தொடர்பும் வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளனர். ஆபாச டேட்டிங் செயலியில் யாருடனாவது தொடர்பில் இருக்கிறீர்களா?... உஷார்.