ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. சட்டமன்றம் கூடியதும் மக்களவை எம்.பி.யான இன்ஜினீயர் ரஷித்தின் சகோதரர் குர்ஷித் அகமது ஷேக் 370 சட்டப்பிரிவுக்கு ஆதரவான பேனரை காண்பித்தார்.
இதற்கு ஒரு பிரிவு எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவர்களை சபாநாயகர் இருக்கையில் அமர வற்புறுத்தினார். இருந்தாலும் அவர்கள் கேட்கவில்லை. பின்னர் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.-க்களை வெளியேற்ற பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.எ.-க்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்ததற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையை சபாநாயகர் நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.