திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்காளர் அலுவலகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக ராஜஸ்தானை சேர்ந்த ஜிதின் (வயது 27) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கமலேஸ்வரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை பயிரிட்டிருப்பதாக கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கலால் துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கஞ்சா செடி பயிரிடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை ஒப்புக் கொண்ட ஜிதின், அலங்கார செடியாக கஞ்சா பயிரிட்டதாக கூறினார்.
இது தொடர்பாக அவருடன் தங்கியிருந்த அலுவலக ஊழியர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் பிரிவின் கீழ் ஜிதின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.