தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதிக்கான 8.25 சதவீத வட்டிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7 கோடிக்கு மேற்பட்ட சந்தாதாரர்களின் கணக்கில் இம்மாதம் வட்டி வரவு வைக்கப்படும்.
3 தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் குறிப்பிட்ட தொகை, அவர்களின் எதிர்கால தேவைக்காக தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதியில் சேமிக்கப்படுகிறது. அதற்கு ஆண்டுதோறும் வட்டி வழங்கப்படுகிறது.
தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி அமைப்பின் உயரிய அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரியம், ஆண்டுதோறும் வட்டி விகிதத்தை முடிவு செய்கிறது.
கடந்த மார்ச் 2-ந் தேதி, மத்திய தொழிலாளர்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் நடந்த மத்திய அறங்காவலர்கள் வாரிய கூட்டத்தில், கடந்த 2025-2026 நிதியாண்டுக்கு வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக தொடர முடிவு செய்யப்பட்டது.
பின்னர், இந்த முடிவு, மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 2025-2026 நிதியாண்டுக்கு 8.25 சதவீத வட்டிவிகிதம் வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் உத்தரவுப்படி, 7 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களின் கணக்குகளுக்கு 8.25 சதவீத வட்டி விகிதம் இம்மாதம் வரவு வைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்மூலம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கு 2023-2024 நிதியாண்டில் இருந்து தொடர்ந்து 3-வது ஆண்டாக 8.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.