புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகம், சத்தீஸ்கர், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, இமாசல பிரதேசம், குஜராத் மற்றும் திரிபுரா ஆகிய 11 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை நடத்தி உள்ளோம்.
கடந்த இரு ஆண்டுகளில் 11 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்தியுள்ளோம். அப்போது நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 3,400 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளோம்.
சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யலாம். போலி செய்தி பரப்பக் கூடாது. போலியான தகவல்கள் செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் வெறுப்பு பிரசாரம் இருக்கக் கூடாது. தனி நபர் வாழ்க்கை குறித்து எந்த விமர்சனமும் இருக்கக் கூடாது என தெரிவித்தார்.