மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (CBSE), 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய அறிமுகப்படுத்தியுள்ள On-Screen Marking (OSM) முறையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ளதாக குற்றம்சாட்டி, இந்திய தேசிய மாணவர் சங்கம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது.
NSUI தரப்பில், OSM முறையால் சில மாணவர்களின் விடைத்தாள்கள் சரியாக மதிப்பிடப்படவில்லை, சில ஆவணங்கள் தெளிவாகப் பதிவேற்றப்படவில்லை என்றும், மதிப்பீட்டு செயல்முறையின் வெளிப்படைத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், முழுமையான சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சமீபத்தில் அரசியல் சர்ச்சையாகவும் மாறியுள்ளது. OSM தொடர்பான ஒப்பந்தம் வழங்கப்பட்ட விதம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், கல்வி அமைச்சகமும் உள்நாட்டு விசாரணையைத் தொடங்கி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருகிறது.
மேலும், OSM முறையால் மாணவர்களின் மதிப்பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில், OSM முறையின் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தி NSUI கடந்த சில நாட்களாக CBSE தலைமையகத்தின் முன்பும் போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரவிருக்கும் நாட்களில் கல்வித்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.