இந்தியா

காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி வீட்டில் சி.பி.ஐ. சோதனை: மதுபான ஊழல் வழக்கில் சிக்குகிறாரா?

சோதனை குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.பாகேலுக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரி வீட்டிலும் சோதனை.

Maalaimalar

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல் மந்திரியும் காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேல் வீட்டில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

ராய்ப்பூர் மற்றும் பிலாயில் உள்ள அவரது வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் பாகேலுக்கு மிக நெருக்கமான ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனை குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

மதுபான ஊழல் தொடர்பான வழக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. மதுபான வழக்கு தொடர்பாக பாகேல் மற்றும் அவரது மகன் சைதன்யாவின் வீட்டில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அந்த சோதனைகளின் போது ரூ.30 லட்சம் ரூபாய் ரொக்கமும் பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சோதனை நடந்து வரும் இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் குவிந்துள்ளனர். அந்த பகுதி பதட்டமாக காணப்பட்டது.