பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், இந்திய பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் முழுமையான சமூக நீதியை ஏற்படுத்தும் நோக்குடன், 2021-ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2026-27ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று தங்களின் அரசு அறிவித்திருப்பதற்காக எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வந்த கோரிக்கைகளை தாங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். இதன் காரணமாக சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இது இந்தியாவில் சமூக நீதியை பாதுகாப்பதில் நீண்ட காலத்திற்கு ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைக்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேநேரத்தில், இந்தக் கணக்கெடுப்பை நடத்துவதில் கடைபிடிக்கப்படும் சில நடைமுறைகளால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுவிடக் கூடும் என்பதால், அது குறித்த எனது கவலைகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமான வீட்டுப்பட்டியல் தயாரிப்பு பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.
அடுத்தக்கட்டமாக, மக்களை எண்ணும் பணிகள் மலைப்பிரதேசங்களில் உள்ள மாநிலங்களில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதலும், மற்ற மாநிலங்களில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதலும் நடைபெறவுள்ளன. இந்த பணியின்போது, சாதி என்ற கேள்விக்கான பதிலை குறிப்பிடும் பகுதியை காலியாக விட்டு விடுவதென்றும், அந்த இடத்தில் மக்கள் குறிப்பிடும் சாதியின் பெயரை அப்படியே பதிவு செய்வதென்றும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் இந்தியத் தலைமைப் பதிவாளர் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த முறையில் மக்களின் சாதி விவரம் சேகரிக்கப்பட்டால், நிறைய சிக்கல்கள் ஏற்படும். நாடு முழுவதும் ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. பெரும்பான்மையான மக்கள் சாதியின் பெயரைக் கடந்து உள்பிரிவுகளால் தங்களை அழைத்துக் கொள்வார்கள். ஆனால், அந்த உட்பிரிவுகளின் பெயர்கள் அரசால் பயன்படுத்தப்படும் சாதிகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. இத்தகைய சூழலில், மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அப்படியே நிரப்பி, அது சாதியின் பெயராக இல்லாமல், உட்பிரிவின் பெயராக இருந்தால், ஒரு அரசின் பட்டியலில் உள்ள சாதிகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிக சாதிகள் இருப்பதாக கணக்கில் காட்டப்படும். இது சரி செய்ய முடியாத குழப்பத்தை உண்டாக்கி, இந்தக் கணக்கெடுப்பின் தரவுகளை பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கிவிடும்.
2011-ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் நடத்தப்பட்டது. அதற்கான வினாக்கள் பட்டியலில் இதே போல்தான் சாதி என்ற வினாவுக்கு எதிரில் காலியிடம் விடப்பட்டு, மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அதில் குறிப்பிடும் முறை பின்பற்றப் பட்டது.
அதன் விளைவு அந்தக் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 46 லட்சத்து 70 ஆயிரம் சாதிகள் இருப்பதாக தெரியவந்தது. இந்தியாவில் 1931-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் 4147 சாதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், 2011 கணக்கெடுப்பில் 46.70 லட்சம் சாதிகள் இருப்பதாகக் கூறப்பட்டது விமர்சனங்களுக்கு உள்ளானது. அதனால், அந்தக் கணக்கெடுப்பு தரவுகள் சமூக நீதிக்காக பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டு விட்டன.
இந்த சிக்கலுக்கான தீர்வு மிகவும் எளிதானது. இந்தியாவில் என்னென்ன சாதிகள் உள்ளன? என்பது குறித்த பட்டியல் மத்திய அரசிடமும், மாநில அரசுகளிடமும் உள்ளன. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தேசிய அளவில் மத்திய அரசால் நடத்தப்படும் நிலையில், அந்தப் பட்டியலை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான செயலியின் மென்பொருளில் இணைத்து, அந்தப் பட்டியலில் இருந்து மக்கள் தங்கள் சாதியை தேர்வு செய்யும் முறையை பின்பற்றுவதுதான் சரியான தீர்வாகும்.
கடந்த 2023-ஆம் ஆண்டு பீகார் மாநிலத்திலும், 2024-ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்திலும் நடத்தப்பட்ட சாதிவாரி சர்வேயில், அரசின் பட்டியலில் உள்ள சாதிகள் வரிசைப்படுத்தப்பட்டு, அதை மக்கள் தேர்ந்தெடுத்து நிரப்பும் முறை கடைபிடிக்கப்பட்டது. அதன் பயனாக பீகார் மாநில சாதிவாரி சர்வேயில் துல்லியமான விவரங்கள் கிடைத்தன. அதனால் அதே முறையை இந்த கணக்கெடுப்பிலும் பின்பற்றலாம்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமாக வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள மக்களை எண்ணும் பணியின் போது மத்திய அரசின் சாதிகள் பட்டியலைக் காட்டி, அதிலிருந்து அவர்களின் சாதி மற்றும் எண்ணை பதிவு செய்யும் முறை கடைபிடிக்கும்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகத்திற்கு தாங்கள் அறிவுறுத்தல்களை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிகளை பதிவு செய்யும் பணிகள் இன்னும் இரு வாரங்களில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இதை அவசர கோரிக்கையாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை ஒட்டுமொத்த நாடும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. சமூகநீதியை காப்பதற்காக இதை செய்யும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.