இந்தியா

3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு

சிறுமி தேஜஸ்வினி வழக்கம் போல பள்ளிக்கு சென்றாள். ஆசிரியர்கள் தேஜஸ்வினியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மாலை மலர்

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பதனகுப்பே கிராமத்தை சேர்ந்தவர் லிங்கராஜு. இவரது மனைவி ஸ்ருதி. இந்த தம்பதியின் ஒரே மகள் தேஜஸ்வினி (வயது 6). இவள் சாம்ராஜ்நகரில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் நேற்று காலை சிறுமி தேஜஸ்வினி வழக்கம் போல பள்ளிக்கு சென்றாள். 2 வகுப்புகள் முடிந்த நிலையில், வீட்டு பாட நோட்டை ஆசிரியரிடம் காண்பிக்க தேஜஸ்வினி வெளியே வந்துள்ளாள். அப்போது திடீரென்று அவள் மயக்கம் போட்டு கீழே விழுந்தாள். இதனால் சக மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆசிரியர்கள் தேஜஸ்வினியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது தேஜஸ்வினி மாரடைப்பால் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.