இந்தியா

தொழிலதிபர் மர்ம கொலை: சிசிடிவி கண்காணிப்பால் ஆத்திரமடைந்து மருமகளே தீட்டிய சதித்திட்டம்

போலீசாரின் தீவிர விசாரணையில், வினீத் மின்சாவின் மருமகள் ஷாலு மின் மீது சந்தேகம் வலுத்தது.

மாமனாரை கொலை செய்வதற்காகத் தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவரையும், மற்றொரு நபரையும் கூலிப்படையாக ஷாலு அமர்த்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் முன்னணி தொழிலதிபரான வினீத் மின்சா பகுதியில் உள்ள தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தத் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கொள்ளை நாடகம் முறியடிப்பு

தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட இடத்தில் சோதனை செய்த காவல்துறையினருக்குத் தொடக்கத்தில் இது அடையாளம் தெரியாத நபர்களால் நடந்த கொள்ளைச் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், வீட்டில் இருந்த பணமோ அல்லது விலைமதிப்பற்ற நகைகளோ எதுவும் திருடப்படவில்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால், குடும்பத்திற்குள் ஏற்பட்ட மோதல் அல்லது முன்விரோதம் காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கப்பட்டது.

சிசிடிவி கேமரா பதிவு

போலீசாரின் தீவிர விசாரணையில், வினீத் மின்சாவின் மருமகள் ஷாலு மின் மீது சந்தேகம் வலுத்தது. விசாரணையில், வீட்டில் வினீத் மின்சா பொருத்தியிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் தன்மீது எப்போதும் தீவிர கண்காணிப்பு செலுத்தப்பட்டு வந்ததும், குடும்பத்தின் நிதி விஷயங்களில் தனக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததும் ஷாலுவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்தது. இதனால், தன் மாமனாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

கொலை நடக்கும்போதே கொண்டாட்டம்

மாமனாரை கொலை செய்வதற்காகத் தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவரையும், மற்றொரு நபரையும் கூலிப்படையாக ஷாலு அமர்த்தியுள்ளார். சம்பவத்தன்று அவர்கள் வீட்டிற்குள் புகுந்து வினீத் மின்சாவைக் கொலை செய்தபோது, வெளியில் எந்தச் சந்தேகமும் வராத வகையில் ஷாலு பார்ட்டியில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார். கொலை நடந்த பின்னர், ஒன்றும் அறியாதவர் போல் அழுது நாடகமாடியுள்ளார்.

சிசிடிவி ஆதாரங்களால் கைதான மருமகள்

கொலை நடைபெற்ற இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள், தொலைபேசி அழைப்புப் பதிவுகள் மற்றும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இறுதியில், ஷாலுவுக்கும் கூலிப்படைக்கும் இடையேயான தொடர்பை உறுதி செய்த போலீசார், மருமகள் ஷாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT