இந்தியா

ஆன்லைன் சூதாட்டத்தால் சீரழிந்த குடும்பம்- மனைவி, தாயாரை கொன்று 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்த வியாபாரி

விசாரணையில் மோகனின் தந்தை ரெயில்வேயில் வேலை செய்து இறந்த பிறகு மோகனுக்கு அந்த வேலை கிடைத்தது. சிறிது நாட்களுக்கு பிறகு வேலையை விட்டுவிட்டார்.

திருப்பதி மாவட்டம் நாராயண வனம் அடுத்த வெங்கட கிருஷ்ண பாலத்தை சேர்ந்தவர் மோகன். சிமெண்ட் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஹரிதா (வயது 33). தாய் சந்திர கலா, மகன் கவுசிக் (14)மகள் ஹரிணி (12).

மோகனின் மைத்துனர் பாலகிருஷ்ணா கடந்த சில மாதங்களாக அவருக்கு உதவியாக சிமெண்ட் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் மோகன் மைத்துனருக்கு உணவு எடுத்து வர வீட்டிற்கு சென்றார்.

வீட்டிற்குச் சென்ற மோகன் அவரது மனைவி மற்றும் தாயை கழுத்தை இறுக்கி கொலை செய்தார். குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று மாமா இறந்து விட்டார் எனக் கூறி குழந்தைகளை பைக்கில் அழைத்துச் சென்றார்.

வீட்டிற்கு சென்ற மோகன் நீண்ட நேரமாகியும் கடைக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாலகிருஷ்ணா வீட்டிற்கு சென்று பார்த்தார்.

அப்போது ஹரிணியும், சந்திரகலாவும் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பள்ளிக்கு சென்று விசாரித்த போது குழந்தைகளை மோகன் அழைத்துச் சென்றதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இது குறித்து பாலகிருஷ்ணா போலீசில் புகார் செய்தார். போலீசார் மோகனையும், அவரது குழந்தைகளையும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.

மோகன் தனது குழந்தைகளை கார்வேட்டி நகர், நகரி, சித்தூர் உள்ளிட்ட இடங்களில் பைக்கில் வைத்து சுற்றினார். பின்னர் இரவு 7 மணியளவில் வேப்பங்குண்டா ரெயில் நிலையம் அருகே பைக்கை நிறுத்தி விட்டு தண்டவாளத்திற்கு சென்று தலை வைத்து படுத்தார்.

குழந்தைகள் தனது தந்தையிடம் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் எனக் கூறி காப்பாற்ற இழுத்தனர். அப்போது எழும்பூரில் இருந்து கச்சிகுடா நோக்கிச் சென்ற ரெயில் 3 பேர் மீதும் மோதியது.

ரெயில் மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் நகரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் பிணங்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் மோகனின் தந்தை ரெயில்வேயில் வேலை செய்து இறந்த பிறகு மோகனுக்கு அந்த வேலை கிடைத்தது. சிறிது நாட்களுக்கு பிறகு வேலையை விட்டுவிட்டார்.

ஆன்லைன் ரம்மி விளையாடியதால் மோகன் கடனில் மூழ்கினார். கடனை அடைக்க தனது 2 வீட்டு மனைகளையும் விற்றார்.

மேலும் மனைவியின் நகைகளை அடமானம் வைத்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் ரூ.20 லட்சத்துக்கு லாட்டரி வாங்கி பரிசு விழாமல் ஏமாற்றம் அடைந்தார். இதனால் மோகனுக்கு மனநிலை கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் மனைவி, தாய் ஆகியோரை கொலை செய்துவிட்டு குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.