பிரிட்டனின் டெவான் பகுதியில் நடைபெற்ற ராணுவ பயிற்சியின் போது ராயல் நேவி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மூன்று கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சோர்டன் அருகே உள்ள பயிற்சி பகுதியில் கடந்த புதன்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளானது ராயல் நேவியின்-Merlin Mk4 வகை ஹெலிகாப்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் காவல்துறை மற்றும் அவசர மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
உயிரிழந்த மூன்று வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. அவர்களின் அடையாள விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள ராயல் நேவியின் தலைமை அதிகாரி ஜெனரல் சர் க்வின் ஜென்கின்ஸ், இந்த விபத்து கடற்படை சமூகத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டார்மர் உள்ளிட்ட பலர் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.