இந்தியா

புனே சொகுசு கார் விபத்தில் சிறுவனுக்கு ஜாமீன் - விமர்சனத்துக்கு உள்ளாகும் 'நீதி'

சிறார் என்பதால் 15 மணிநேரத்தில் ஒரு சில நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம்.குடிக்க அனுமதித்த அவன் பணக்கார தந்தைக்கு என்ன நிபந்தனை கொடுக்க போகிறதோ நம் நீதிமன்றங்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கல்யாணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போர்ச் கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அஸ்வினி கோஸ்டா சம்பவ இடத்திலேயே இறந்தார். அனிஸ் துதியா மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த காரை 17 வயது சிறுவன் ஓட்டி வந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய சிறுவன் புனேவை சேர்ந்த பிரபல கட்டுமான தொழிலதிபரின் மகன் என தெரிய வந்துள்ளது. அவரை விபத்து நிகழ்ந்த இடத்தில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் காவலர்கள் வசம் ஒப்படைத்தனர்.

அந்த சிறுவன் மதுபோதையில் இருந்ததும், பார்ட்டி முடித்து வீடு திரும்பிய போது காரை வேகமாக இயக்கியுள்ளார் என்பதும், ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறார் என்பதால் 15 மணிநேரத்தில் ஒரு சில நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம்.

அவருக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் கிடைத்துள்ளதாக அந்த சிறுவனின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

நிபந்தனையில் கூறியிருப்பதாவது,

போக்குவரத்து காவலர்களுடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும், மனநல சிகிச்சை பெற வேண்டும், சாலை விபத்தின் விளைவு மற்றும் அதற்கான தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும், போதை ஒழிப்பு மையத்தில் கவுன்சிலிங் பெற வேண்டும், எதிர்காலத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வயது குறைந்த மகனை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்காக அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

17 வயது சிறுவனுக்கு வெறும் 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட சம்பவம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அந்தச் சிறுவனுகு சமூக சேவை, போதை விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதுதல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

செய்தி வெளியாகி பூதாகரமானதால் சிறாரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார், மகனுக்கே ஜாமீன் நிபந்தனை கட்டுரை எழுத வேண்டும் என்றால் சட்டவிரோதம் என தெரிந்தும் தன் மகனுக்கு காரை ஓட்ட கொடுத்த, அவன் குடிக்க அனுமதித்த அவன் பணக்கார தந்தைக்கு என்ன நிபந்தனை கொடுக்க போகிறதோ நம் நீதிமன்றங்கள்.

சாமானிய, ஏழை மக்களுக்கு வழக்கு, தண்டனை என வழங்கும் இந்த நீதிமன்றங்கள், கோடி கணக்கில் ஊழல் செய்தவர்கள், கொலை செய்தவர்கள், கொள்ளை அடித்தவர்கள் என்று பல்வேறு வழக்குகளில் இருக்கும் பண படைத்தவர்களை இந்த சட்டமும், போலீஸூம் கண்டு காணாமல் இருக்கிறார்கள் என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.