அண்ணாமலை-பாஜக கொடி 
இந்தியா

மணிப்பூர், கோவாவில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி தமிழகத்திலும் நிகழும்- அண்ணாமலை நம்பிக்கை

உத்தர காண்ட்டில் வெற்றிக் கொண்டாட்டததை காங்கிரஸ் ஆரம்பித்ததாகவும், ஆனால் மக்கள் தீர்ப்பு பாஜகவுக்கு ஆதரவாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்னை:

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாஜகவிற்கு கிடைத்துள்ள வெற்றி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மறுபடியும் ஒருமுறை நமது நாடு ஒரு மித்த குரலில் நாங்கள் பாரத பிரதமருடன் பயணிப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். 

உத்தர பிரதேசத்தில் 33 ஆண்டுகளுக்கு பிறகு ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இது சாதனை. அந்த மாநிலத்தில் சாதி அடிப்படையில், மத அடிப்படையில் ஆட்சி நடைபெற்று வந்தது. அதை முதன் முறையாக பாஜக உடைத்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி கையாண்ட வித்திற்கு கிடைத்த வெறறியாக இது கருதப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்றே வெற்றிக் கொண்டாட்டததை காங்கிரஸ் கட்சியினர் ஆரம்பித்தனர். ஆனால் இன்று மக்கள் தீரப்பு பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது. 

மணிப்பூரில் 2012 ஆண்டு தேர்தலில் பாஜகவிற்கு எந்த இடமும் கிடைக்கவில்லை. 2017 ல் 21 இடங்களை பாஜக பிடித்தது. இன்று தனிப் பெரும்பான்மையுடன் அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது.

மணிப்பூரில் 52 சதவீதம் சிறுபான்மை சமூகத்தினர் உள்ளனர். அங்கு பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது சரித்திர சாதனை. 

கோவாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர். இது தமிழகத்திலும் நிகழும் என்பதில் எந்த வொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. 

அது 2024 ஆண்டா அல்லது 2026 ஆண்டா என்பது தெரியாது. ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தயாராகி விட்டதாக தேர்தல் ஆணைம் கூறியுள்ளது. தமிழக பாஜக கட்சியும் தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.