இந்தியா

பிரதமர் மோடியை terrorist என விமர்சித்த கார்கே மீது நடவடிக்கை எடுக்க EC-க்கு பாஜக வலியுறுத்தல்

மத்திய முகமைகள் மூலம் பிரதமர் மோடி அச்சுறுத்துகிறார் விமர்சித்தபோது terrorist எனக் குறிப்பிட்டதால் பாஜக புகார் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை பயங்கரவாதி என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்த கருத்தை தேர்தல் ஆணையம் (EC) உடனடியாகக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, காங்கிரஸ் தலைவர் கார்கே பகிரங்க மன்னிப்பு கோருமாறு உத்தரவிட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர், அதிமுக-வுடனான பாஜக-வின் கூட்டணியை விமர்சிக்கும்போது, ​​ஆரம்பத்தில் பிரதமரை ஒரு பயங்கரவாதி என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், அக்கருத்தின் பின்னணியை விளக்குமாறு செய்தியாளர்கள் வற்புறுத்தி கேட்டபோது, ​​பிரதமர் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பையே அச்சுறுத்தி வருவதையே தாம் அவ்வாறு குறிப்பிட்டதாக காங்கிரஸ் தலைவர் விளக்கம் அளித்தார்.

அவர் மக்களையும் அரசியல் கட்சிகளையும் அச்சுறுத்தி வருகிறார். அவர் ஒரு பயங்கரவாதி (என்ற நேரடிப் பொருளில்) என்று நான் ஒருபோதும் கூறவில்லை. அச்சுறுத்துதல் என்பது. அவர் தனது அதிகாரத்தையும் அரசு இயந்திரத்தையும் தவறாகப் பயன்படுத்துகிறார். எதிர்க்கட்சிகளைத் துஷ்பிரயோகம் செய்து, அவதூறு பரப்பி வருகிறார்," என்றார்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திடம் (EC) பாஜக புகார் மனு அளித்துள்ளது. அந்த மனுவில், பிரதமருக்கு எதிராக கார்கே வெளியிட்ட கருத்து மிகவும் இழிவானது. இக்கூற்று தேர்தல் நடத்தை விதிகளை மீறிய ஒரு செயல் என்பதை உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மல்லிகார்ஜுன கார்கே பகிரங்க மன்னிப்பு கோரவோ அல்லது தனது கருத்தைத் திரும்பப் பெறவோ உத்தரவிட வேண்டும். அத்துடன், சட்டம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, அவருக்குப் பொருத்தமான தேர்தல் பிரசாரக் கட்டுப்பாடுகளையோ அல்லது பிற சீர்திருத்த நடவடிக்கைகளையோ விதிக்க வேண்டும்.

பாரதிய நியாய சன்ஹிதா, 2023-இன் பிரிவுகள் 175, 171/174, 356(1) ஆகிய சட்டங்களின் கீழ் ஒழுங்குமுறை நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். கார்கேவின் கருத்தை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் நீக்குமாறு உத்தரவிடுங்கள். தேர்தல் செயல்முறையின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும், சுதந்திரமான, நியாயமான, அமைதியான மற்றும் கொள்கை சார்ந்த பிரசாரத்தை உறுதி செய்யவும் தேவையான பிற உத்தரவுகளையும் பிறப்பியுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் அடங்கிய கட்சியின் பிரதிநிதிகள் குழு, இக்கோரிக்கையை வலியுறுத்தி நாளை தேர்தல் ஆணையத்தைச் சந்திக்கவுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.