மெகபூபா முப்தி
இந்தியா

பாஜக-வில் பசு பாதுகாப்புக்கே முன்னுரிமை: மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மெகபூபா முப்தி சாடல்

டெல்லியில் 16 வயது பள்ளி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கவலை தெரிவித்துள்ளார்.

சமூக வலைதள பதிவு

இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பாஜகவின் இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பை விட பசுப் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

பசுவதை செய்ததாக வெறும் சந்தேகத்தின் பேரிலேயே, மக்கள் கும்பல்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும், கற்பழிப்பு, பாலியல் வன்முறை மற்றும் கொடூரங்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் விஷயத்தில், தண்டனை பெற்ற குற்றவாளிகள் தொடர்ந்து பரோலில் வெளிவருவதோடு மட்டுமல்லாமல், முழுமையான ஆதரவையும் பெறுகின்றனர்.

பசுக்களின் பெயரால் நடக்கும் சட்டவிரோதச் செயல்களுக்குச் செலவிடப்படும் ஆற்றலில் பாதியையாவது பெண்களின் பாதுகாப்பிற்காகச் செலவிட்டால், இந்தியா ஒவ்வொரு மகளுக்கும், சகோதரிக்கும், தாய்க்கும் மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்கும்.

இவ்வாறு மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் ஓடும் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் 16 வயது பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத்தான் மெகபூபா முப்தி பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளார்.