மபி முதல்வர் பிரதமருக்காக சிறப்பு ஆயுஷ் ஹோமம் நடத்தும் காட்சி 
இந்தியா

பிரதமர் மோடி நீண்ட காலம் வாழ நாடு முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகள்

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான், போபாலில் உள்ள கோயிலில் பிரதமர் மோடிக்காக சிறப்பு ஆயுஷ் ஹோமத்தை நடத்தினார்.

மாலை மலர்

போபால்: 

பிரதமர் மோடி நேற்று பஞ்சாப் சென்றபோது போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பிரதமரின் வாகனம் மேம்பாலத்தில் 20 நிமிடங்களுக்கும் மேல் நிறுத்தப்பட்டது.  இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டதாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, பிரதமர் டெல்லி திரும்பினார். 

பிரதமரின் பாதுகாப்பில் மாநில அரசு விதிமீறல் செய்ததாகவும், திட்டமிட்டே அலட்சியமாக செயல்பட்டதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி நீண்ட காலம் வாழ வேண்டும் என வேண்டி மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான், போபாலில் உள்ள கோயில் ஒன்றில்  சிறப்பு ஆயுஷ் ஹோமத்தை நடத்தினார்.

பாஜக தேசிய துணைத்தலைவர் ஜெய் பாண்டா டெல்லியில் உள்ள கோயிலில் பிரதமர் மோடிக்காக சிறப்பு வழிபாடு செய்தார்.

மேலும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் பிரதமர் மோடிக்காக சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படவுள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.