இந்தியா

பா.ஜனதா கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் நாளை முடிவு

பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலமும் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதியுடன் முடிகிறது.

புதுடெல்லி:

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வருகிற 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார். எதிர்கட்சி வேட்பாளராக யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டு உள்ளார்.

இதுபோல துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலமும் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதியுடன் முடிகிறது. இதற்கான தேர்தல் ஆகஸ்டு 6-ந் தேதி நடக்கிறது.

இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு நாளை கூடி முடிவு செய்கிறது.

இதற்கிடையே எதிர்கட்சிகளும் துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது.

இதில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது பற்றி நாளை மறுநாள் 17-ந் தேதி ஆலோசனை நடத்த உள்ளனர்.