புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மகா கும்பமேளா மூலம் இந்தியாவின் பலத்தை உலகமே கண்டது என்றார்.
மேலும், மகா கும்பமேளாவை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி முடித்ததற்காக கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பலரும் மகா கும்பமேளா வெற்றிக்காக தங்கள் பங்களிப்பை தந்துள்ளனர்.
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பல்வேறு சாதனைகளை புரியலாம் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன். தற்போது, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் பிரம்மாண்டத்தை கண்டது என தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தின் வெளியே சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.யான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மகா கும்பமேளாவை ஒருங்கிணைத்து நடத்த மத்திய அரசு எவ்வளவு நிதி வழங்கியது? உத்தரப் பிரதேச முதல் மந்திரியும், மத்திய பிரதேச முதல் மந்திரியும் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை மட்டுமே செய்தனர். மக்கள் எல்லைக்குள் கூட நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
1000 இந்துக்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு பா.ஜ.க.வும், அதன் தொண்டர்களும் உதவ வேண்டும்.
காணாமல் போயுள்ள அந்த 1000 இந்துக்கள் குறித்து அவர்களின் குடும்பங்களுக்கு பா.ஜ.க. முறையான பதிலை வழங்கவேண்டும். காணாமல் போன அந்த 1000 இந்துக்களையாவது பா.ஜ.க. கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.