இந்தியா

ஹிட்லருடைய பிரசார அமைப்பு போன்று பா.ஜனதா பணியாற்றி வருகிறது... சரத் பவார்

நகர்புறங்களில் கான்கிரீட் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.2024-25-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக மாறும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் வேகமாக ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் மாகராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள கோவில் நகரமான ஷீரடியில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் பேசியதாவது:-

நாட்டின் தற்போதைய சூழ்நிலை பா.ஜனதாவுக்கு சாதகமாக இல்லை. மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

பா.ஜனதா அதிகாரத்தில் உள்ளது. அவர்கள் தீவிரமான பிரசார அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஜெர்மனியில் ஹிட்லருடைய பிரசார அமைப்பை போன்று பா.ஜனதா பணியாற்றி வருகிறது.

ஆனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்காளம், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியில் இல்லை.

2022-ம் ஆண்டு விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்றும், நகர்புறங்களில் கான்கிரீட் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

2024-25-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக மாறும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். ஆனால் இதில் 50 சதவீதத்தை கூட நாம் எட்டிப்பிடிக்கவில்லை. எனவே இதுவும் ஒரு வெற்று வாக்குறுதிதான்.

2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபிறகு பா.ஜனதா அரசு பல திட்டங்களை அறிவித்தது. பல உறுதிமொழிகளை வழங்கியது. ஆனால் அந்த திட்டங்களை செயல்படுத்தாமல் ஏமாற்றியது. மக்கள் இதனை தற்போது உணர ஆரம்பித்துவிட்டனர். பெண்கள் அவமதிக்கப்படுகிறார்கள்.

வேலையில்லா திண்டாட்டம் காரணமாக இளைய தலைமுறையினர் கவலையில் உள்ளனர். இதன் காரணமாகவே கடந்த 13-ந் தேதி நாடாளுமன்றத்துக்குள் சிலர் பாதுகாப்பை மீறி நுழைந்தனர்.

எரிபொருள் விலை சாதாரண குடிமக்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.