பீகார் மாநிலம் கயா மாவட்டம் மஸ்த்புராவை சேர்ந்தவர் விகாஸ் குமார். இவர் பிளம்பர் மற்றும் எலெக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவர் மாதம் ரூ.10 முதல் 12 ஆயிரம் வரை பணம் சம்பாதித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை விகாஸ்குமார் தனது வங்கிக் கணக்கை சரிபார்த்தார். அப்போது அவரது வங்கி கணக்கில் ரூ.94 கோடி வரவு வைக்கப்பட்டு இருந்தது. வங்கியின் தொழில்நுட்ப கோளாறால் இந்த தவறு ஏற்பட்டு இருக்கலாம் என நினைத்தார்.
மீண்டும் மாலை தனது வங்கி கணக்கை சரிபார்த்த போது ரூ.294 கோடி வரவு வைக்கப்பட்டு இருந்தது. ஒரே நாளில் சில மணி நேரங்களில் ரூ.200 கோடி வரவு வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஆன்லைனில் வங்கி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார். மேலும் போத்கயா சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது வங்கியின் தொழில்நுட்ப கோளாறா அல்லது இதன் பின்னனியில் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் இருக்கின்றனவா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.