இந்தியா

பைக்கில் வீலிங் சாகசம்... காரை எட்டி உதைத்து அராஜகத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

2 பைக்கில் வந்த 4 இளைஞர்கள் மேம்பாலத்தில் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது கத்தியை காட்டி கார் ஓட்டுனரை அவர்கள் மிரட்டியுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள பிரபல மாரேனஹள்ளி - சில்க் போர்டு மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் அவ்வழியே வந்த காரை எட்டி உதைத்து, வரம்பு மீறிய செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

2 பைக்கில் வந்த 4 இளைஞர்கள் அந்த மேம்பாலத்தில் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டனர். இதனால் அதே மேம்பாலத்தில் வந்த பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டது. அப்போது அவ்வழியே வந்த காரை எட்டி உதைத்து அராஜகத்தில் ஈடுபட்டனர். அப்போது கத்தியை காட்டி கார் ஓட்டுனரை அவர்கள் மிரட்டியுள்ளனர். பின்னர் வீலிங் செய்தபடியே அங்கிருந்து சென்றனர்.

இதனை காரில் பின்னாடி வந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். நகரில் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக குறிப்பிட்டு அந்த வீடியோவை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

அந்த வீடியோ வைரலான நிலையில் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர்களின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.