இந்தியா

பெங்களூரு மழை - மருத்துவமனை சுற்றுசுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பவுரிங் (Bowring) மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூருவில் பெய்த அதீத கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சிவாஜிநகர் பகுதியில் அமைந்துள்ள பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், மழையிலிருந்து தப்பிக்க சுவரின் ஓரம் ஒதுங்கியிருந்த நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என 7 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

பலியான 7 பேரில் 3 குழந்தைகளும் அடங்குவர். அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மீட்புப் பணிகள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.